இரத்தினபுரி புனித அலோசியஸ் கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப நிகழ்வில் இலங்கை பாராளுமன்றமும் இணைந்தது

திகதி : 2024-11-11

Print

இரத்தினபுரி புனித அலோசியஸ் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு அண்மையில் (ஒக். 30) இலங்கை பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன தமைமையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

ஜனநாயகத்தின் விழுமியங்களைப் பாடசாலை மாணவர்கள் மத்தியில் கொண்டுசெல்வதன் மூலம் பாராளுமன்ற முறையின் நடைமுறை அனுபவத்தை வழங்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சியை இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்துடன் இணைந்து கல்லூரி ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன, பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பங்கு குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்ததுடன், பாடசாலைக் காலத்திலேயே பாராளுமன்றச் செயற்பாடுகளை முறையாகப் புரிந்துகொண்டு சமூகத்தின் பிரச்சினைகளுக்கு முறையான பதில்களைப் பெறுவதற்கான வாய்ப்புக் குறித்து வலிறுத்தினார். இங்கு உரையாற்றிய இரத்தினபுரி அலோசியஸ் கல்லூரியின் அதிபர், மாணவர் பாராளுமன்றங்கள் மூலம் பெற்ற அனுபவங்களை நடைமுறைப்படுத்துவதன் பெறுமதி மற்றும் பாடசாலை அமைப்பின் இவ்வாறான வேலைத்திட்டங்களில் மாணவர் சமூகத்தின் அறிவையும் மனப்பான்மையையும் மேம்படுத்துவதன் பெறுமதி குறித்த விடயங்களைத் தெளிவுபடுத்தினார்.

மாணவர் சமூகத்திற்கு பாராளுமன்ற முறைமை பற்றிய நடைமுறைப் புரிதலை வழங்கும் நோக்கில் மாணவர் பாராளுமன்றத்தின் முதல் அமர்வில் சபாநாயகர் தெரிவு, உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்தல், அவர்களின் எதிர்கால திட்டங்கள் மற்றும் அவை தொடர்பான முன்மொழிவுகளை சபைக்கு முன்வைப்பது போன்ற நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டன.

இங்கு மாணவர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவர்களுக்கு உத்தியோகபூர்வ சின்னங்கள் அணிவிக்கப்பட்டதுடன், சான்றிதழ்கள் மற்றும் பரிசில்களும் வழங்கப்பட்டன. பாடசாலை நூலகத்திற்கு ஒருதொகுதி நூல்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

 

1 2

3 4

5 6

7 8