தியவண்ணா ஓய நீர் மாசடைந்தமை, நிறம் மாற்றமடைந்தமை குறித்து மேலதிக நடவடிக்கைகளை எடுக்க செயலணி |
திகதி : | 2021-04-23 |
|
தியவண்ணா ஓய நீர் மாசமடைந்தமை, நிறம் மாற்றமடைந்தமை தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கு செயலணியை அமைத்து, இதுபற்றி எழுத்துமூலம் தனக்கு அறிவிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்திய கலாநிதி அனில் ஜாசிங்ஹவுக்குத் தெரிவித்தார்.
தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு நேரடியான தீர்வைக் கண்டுபிடித்தல், அதனை விரைந்து நடைமுறைப்படுத்தல், குறித்த நீரை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர எதிர்கொண்டுள்ள சிரமங்கள் மீண்டும் ஏற்படாதிருப்பதன் அவசியம் குறித்தும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
தியவண்ணா ஓய நீர் மாசடைந்தமை, நிறம் மாற்றமடைந்தமை தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் கௌரவ சபாநாயகர் தலைமையில் கடந்த 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இது பற்றி சுட்டிக்காட்டப்பட்டது.
பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக உள்ளிட்ட அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சு, சுற்றாடல் அமைச்சு, நகர அபிவிருத்தி, கரையோரப் பாதுகாப்பு, கழிவுப்பொருள் வெளியேற்றம் மற்றும் துப்பரவு ஏற்பாடுகள் இராஜாங்க அமைச்சு, இலங்கை நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, மத்திய சுற்றாடல் அதிகாரசபை, இலங்கை நனோ தொழில்நுட்ப நிலையம், கட்டட ஆராய்ச்சி நிறுவகம், ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம், கோட்டை மாநகரசபை, கடுவலை மாநகரசபை, தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி, அபிவிருத்தி முகவரமைப்பு, இலங்கை பொலிஸ் ஆகின இக்கூட்டத்தில் கலந்துகொண்டன.
இக்கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கமளித்த பாராளுமன்ற செயலாளர் நாயகம், தியவண்ண ஓயாவின் தற்போதைய நிலைமையால் ஏற்பட்டுள்ள பிரச்சினையான சூழல் மற்றும் அந்நிலைமையை மாற்ற வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.
சட்டவிரோத குடியிருப்பாளர்களினால் வெளியேற்றப்படும் கழிவுநீரினால் ஏற்படும் பாதிப்பைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம், தியவண்ணா ஓயாவின் நீரின் தரத்தை உறுதிப்படுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்திய கலாநிதி அனில் ஜாசிங்ஹ வலியுறுத்தினார்.