இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஜனாதிபதியினால் புதிய அரசாங்கத்தின் கொள்கைக் பிரகடன உரை பாராளுமன்றத்தில் நாளை பிற்பகல் 3.00 மணிக்கு

திகதி : 2020-08-19

அரசியலமைப்பின் 33 (2) உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நாளை (20) பிற்பகல் 3.00க்கு அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்தவுள்ளார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரும் ஜனாதிபதியினால் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்படும்.

அதிமேதகு ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வருகைதரும் நிகழ்வு அவருடைய அறிவுறுத்தலின் பேரில் மிகவும் சாதாரணமானமுறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்படுதல் மற்றும் வாகன அணிவகுப்பு போன்றவை இடம்பெறாது. மாறாக பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் ஜனாதிபதி அவர்களை வரவேற்கும் முகமாக முப்படையினரின் பங்களிப்புடனான கலாசார நடனம் இடம்பெறும்.
அன்றையதினம் பிற்பகல் 2.15 மணிக்கு விருந்தினர்களின் வருகை இடம்பெறவிருப்பதுடன், முதலில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகைதரவுள்ளனர். அதன் பின்னர் புதிய சபாநாயகரின் வருகையும், கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வருகையும், அதனையடுத்து அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் வருகையும் இடம்பெறும்.

புதிய சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க ஆகியோர் பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை வரவேற்பார்கள்.

படைக்கலசேவிதர், பிரதிப் படைக்கலசேவிதர் மற்றும் உதவி படைக்கலசேவிதர் சபாநாயகர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் உள்ளிட்ட குழுவினரால் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் சபைக்குள் அழைத்துச் செல்லப்படுவார். இதன்போது பாராளுமன்றத்தின் பிரதான வாயிலின் அருகில் கொழும்பு தேவிபாலிகா வித்தியாலய மாணவியரால் ஜயமங்கள கீதம் இசைக்கப்படும்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வை முன்னிட்டு முப்படையினர் மற்றும் பாடசாலை மாணவியர் இன்றையதினம் (19) ஒத்திகையில் ஈடுபட்டிருந்தனர்.

 

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வுக்கு முன்னதாக நாளை (20) காலை 9.30 மணிக்கு புதிய பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இடம்பெறவுள்ளது. இதில் முதலில் சபாநாயகர் தெரிவு, அதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிச்சத்தியம் அல்லது உறுதியுரை என்பன இடம்பெறும். இதன் பின்னர் பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகியோர் தெரிவுசெய்யப்படுவர்.

இதன்போது பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமைய சிங்களம், தமிழ், மற்றும் ஆங்கில மொழிகளில் விரும்பியவொரு மொழியில் உறுப்பினர்கள் பதவிச் சத்தியம் அல்லது உறுதியுரையை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதுடன், இதற்கான ஆவணங்கள் உறுப்பினர்களின் மேசைகளில் வைக்கப்பட்டிருக்கும்.

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom