அரசியலமைப்புப் பேரவையின் தலைவராக முன்னாள் சபாநாயகர் வழங்கிய சேவைக்குப் பிரதமர் பாராட்டு |
திகதி : | 2020-08-03 |
அரசியலமைப்புப் பேரவையின் 82வது கூட்டம் இன்று (ஆகஸ்ட் 03) மாலை அதன் தலைவர் கரு ஜயசூரிய தலைமையில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றதுடன், கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த சமரசிங்க மற்றும் பிமல் ரத்னாயக்க ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர். இவர்களுடன் சிவில் சமூக உறுப்பினர்களான யாவிட் யூசுப், பேராசிரியர். நாகநாதன் செல்வகுமார், அரசியலமைப்புப் பேரவையின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற செயலாளர் நாயகமுமான தம்மிக்க தஸநாயக்க ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஆரம்பத்தில், அரசியலமைப்பின் உறுப்பினர்களை வரவேற்ற அரசியலமைப்புப் பேரவையின் தலைவரான முன்னாள் சபாநாயகர், மிகவும் வேலைப்பழு நிறைந்த சூழ்நிலையில் கூட்டத்தில் கலந்துகொள்ளமை தொடர்பில் தனது நன்றிகளைத் தெரிவித்தார். இதன் பின்னர், பொதுச்சேவைகள் ஆணைக்குழு, மனித உரிமை ஆணைக்குழு மற்றும் இழப்பீடு தொடர்பான அலுவலகம் ஆகியவற்றில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவது குறித்து அரசியலமைப்பு பேரவை கவனம் செலுத்தியிருந்ததுடன், இவற்றை நிரப்புவது குறித்த இறுதித்தீர்மானத்தை அடுத்த கூட்டத்தில் எடுப்பதற்கும் முடிவுசெய்யப்பட்டது.
அத்துடன், நிதி ஆணைக்குழு, எல்லை நிர்ணய ஆணைக்குழு, கணக்காய்வு சேவை ஆணைக்குழு மற்றும் தேசிய கொள்வனவு ஆணைக்குழு ஆகியவற்றிடமிருந்து கிடைக்கப்பெற்ற காலாண்டு அறிக்கைகள் பற்றியும் அரசியலமைப்புப் பேரவை கவனம் செலுத்தியது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கலாநிதி தீபிகா உடுகம வழங்கியுள்ள இராஜினாமாக் கடிதம் குறித்து அவதானம் செலுத்தியிருந்த அரசியலமைப்புப் பேரவை, மனித உரிமைகள் ஆணைக்குழுவை உயர்ந்த இடத்துக்குக் கொண்டுசெல்ல அவர் வழங்கிய தலைமைத்துவத்தையும் பாராட்டியிருந்தது. மனித உரிமை ஆணைக்குழு உலகில் மிகவும் சிறந்த ஆணைக்குழுக்களில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவுக்குப் பராட்டுக்களைத் தெரிவிப்பதாகவும் உடுகம, அரசியலமைப்புப் பேரவைக்குச் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேற்குறிப்பிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்ட பின்னர் கருத்துத் தெரிவித்த அரசியலமைப்புப் பேரவையின் தலைவர் குறிப்பிடுகையில், அரசியலமைப்புப் பேரவையின் தலைவராகப் பங்கேற்கும் இறுதிக் கூட்டம் இதுவென்றும், இதுவரை காலமும் ஒத்துழைப்பு வழங்கிய பிரதமர் மற்றும் ஏனைய உறுப்பினர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார். சகல தரப்பினரினதும் கருத்துக்களைப் பெற்று அவர்களின் இணக்கப்பாட்டுடனேயே சகல தீர்மானங்களும் எடுக்கப்பட்டதாகவும் கௌரவ கரு ஜயசூரிய சுட்டிக்காட்டினார். தலைவராகப் பணியாற்றிய காலப்பகுதியில் எந்தவிதமான கருத்துவேறுபாடுகளும் இன்றி ஏகமனதாக முடிவுகளை எடுக்கக் கிடைத்தமை குறித்தும் நன்றி தெரிவித்தார்.
அத்துடன், அரசியலமைப்பு பேரவை கூட்டத்தை வினைத்திறனாகவும், உரிய காலத்திலும் நடத்துவதற்கு பாராளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் பாராளுமன்ற பணியாளர்களிடமிருந்து கிடைத்த ஒத்துழைப்புத் தொடர்பிலும் தலைவர் தனது நன்றிகளைத் தெரிவித்தார். அரசியலமைப்புப் பேரவைக்கு வழங்கிய ஒத்துழைப்புக் குறித்து சகல சுயாதீன ஆணைக்குழுவின் தலைவர்களுக்கும் அவர் நன்றிகளை வெளியிட்டார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிடுகையில், அரசியலமைப்பு பேரவை கூட்டத்தை நட்புறவான சூழ்நிலையில் நடத்தியிருப்பதுடன், அனைத்து உறுப்பினர்களின் கருத்துகளுக்கும் மதிப்பளித்து அவற்றுக்கும் இடமளிக்கும் வகையில் கூட்டங்கள் நடத்தப்பட்டமை தொடர்பில் எனது பாராட்டுக்களை கரு ஜயசூரிய அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
சபாநாயகர் தொடர்பில் பிரதமர் முன்வைத்த கருத்துக்களுடன் தானும் இணங்குவதாக கௌரவ மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டார்.
அரசியலமைப்புப் பேரவையின் தலைவர் கரு ஜயசூரிய அவர்கள் தனது பதவியிலிருந்து முன்னெடுத்த செயற்பாட்டைப் பாராட்டியிருந்த கௌரவ பிமல் ரத்னாயக்க, கரு ஜயசூரிய அவர்கள் பாராளுமன்றத்துக்காக செயற்பட்ட விசேடமான சபாநாயகர் என்றும் சுட்டிக்காட்டினார். அத்துடன்; நவீன தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு சபாநாயகர் முக்கிய பங்காற்றியதாகவும் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.
சிவில் சமூக உறுப்பினரான யாவிட் யூசுப் குறிப்பிடுகையில், அரசியலமைப்புப் பேரவையில் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் அங்கம் வகித்திருந்தாலும் சகலரினதும் பிரதிநிதிகளின் கருத்துக்களுக்கு சமமாக கவனம் செலுத்தியிருந்ததாகக் கூறினார். மற்றுமொரு சிவில் சமூக உறுப்பினரான பேராசிரியர் நாகநாதன் செல்வகுமார் அவர்களும் அரசியலமைப்புப் பேரவையின் தலைவரின் செயற்பாடுகளைப் பாராட்டியிருந்தார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்









