இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

நில்வளா கங்கை உள்ளிட்ட நீர் மூலங்கள் ஊடாக ஏற்பட்டுள்ள சிக்கல்களை ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட குழு முதன்முறையாகக் கூடியது

திகதி : 2024-05-07

  • நில்வளா கங்கை தொடர்பான பிரச்சினைகளைக் கண்டறிந்து விரைவான அறிக்கையைப் பெறுவதற்கு ருஹுனு பல்கலைக்கழகத்தின் தலைமையில் நிபுணர் குழுவொன்றை நியமிப்பதற்கு முன்மொழிவு
  • பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி, கருத்துகளைப் பெற குழு தீர்மானம்
  • நில்வளா கங்கையிலிருந்து நீர் இறங்கும் பிரதான கால்வாய்களை உடனடியாக சுத்தப்படுத்துவதற்கு முன்மொழிவு

 

மாத்தறை மாவட்டத்தில் நில்வளா கங்கை உள்ளிட்ட நீர் மூலங்கள் ஊடாக ஏற்பட்டுள்ள சிக்கல்களை விரிவாக ஆராய்ந்து புதிய மீள் நிர்மாண முன்மொழிவுகளை தயாரிப்பதற்குப் பொருத்தமான பரிந்துரைகளை வழங்குவதற்கான பாராளுமன்ற விசேட குழு அண்மையில் கூடியது. வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கௌரவ பவித்ராதேவி வன்னிஆரச்சி தலைமையில் இந்தக் குழு கூடியது.

நில்வளா கங்கை சம்பந்தப்பட்ட பிரச்சினை பல வருடங்களாக எழுந்துவரும் பிரச்சினை என இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் உறுப்பினர்கள் குறிப்பிட்டனர். அதற்கமைய, இந்தப் பிரச்சினையை சரியாகப் புரிந்து கொள்ளும் வகையில் நில்வளா கங்கை சம்பந்தமாக மாத்தறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அறிஞர்கள் மேற்கொண்ட ஆய்வுகள் தொடர்பில் கண்டறிவதன் முக்கியத்துவம் இதன்போது கலந்துரையாடப்பட்டது. சிறிய மழையின் போதும் நில்வளா கங்கை பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் குறித்தும் குழுவில் அவதானம் செலுத்தப்பட்டது. இந்நிலையில், அப்பகுதி விவசாயிகள் பல போகங்களாக விவசாயம் செய்ய முடியாமல் உள்ள நிலையில், இப்பிரச்னைகளுக்கு தீர்வுகாண, அடுத்த மழைக்காலத்திற்கு முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இதன்போது, ருஹுனு பல்கலைக்கழகத்தை தலைமையாகக் கொண்டு, பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் மொறட்டுவை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் நிபுணர்கள் குழுவொன்றை நியமித்து நில்வளா கங்கை தொடர்பான பிரச்சினைகளை சுயாதீனமாகக் கண்டறிந்து விரைவான அறிக்கையைப் பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி, அந்தப் பிரச்சினைக்கான தீர்வுகள் தொடர்பான அவர்களது கருத்துகளைப் பெற்றுக்கொள்வதற்கும் குழு இதன்போது தீர்மானித்தது.

மேலும், எதிர்வரும் மழைக்காலத்திற்கு முன்னர் நில்வளா கங்கையிலிருந்து நீர் இறங்கும் பிரதான கால்வாய்களை உடனடியாக சுத்தப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், கால்வாய்களை சுத்தப்படுத்தும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

இந்தக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ டலஸ் அழகப்பெரும, கௌரவ புத்திக பத்திறண, கௌரவ வீரசுமன வீரசிங்க, கௌரவ நிபுண ரணவக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

1 2

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom