இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலையீ்ட்டையடுத்து நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை சட்டமூலத்தை மீண்டும் தயாரிக்க நடவடிக்கை

திகதி : 2024-04-03

  • சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரினதும் கருத்துக்களுக்கும் மதிப்பளித்தமைக்காக அரசாங்க நிதி பற்றிய குழு நிதி அமைச்சுக்குப் பாராட்டு

நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைச் சட்டமூலம் குறித்த விடயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா தலைமையிலான அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலையீடு செய்ததன் காரணமாக குறித்த சட்டமூலத்தை மீண்டும் வரைபுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமூகங்களை அடிப்படையாகக் கொண்ட அமைப்புக்கள், வெளிப்படையாகப் பரிந்துரைப்போர், மதியுரையகங்கள், நிதிநுட்ப நிறுவனங்கள் எனப் பல்வேறு தரப்பினரையும் அழைத்து அரசாங்க நிதி பற்றிய குழு நடத்திய விரிவான கலந்துரையாடல்களையடுத்து இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைச் சட்டமூலத்தை நிதி அமைச்சு பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தாலும், அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலையீட்டுடன் சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள் அழைத்துக் கலந்துரையாடப்பட்டு அவர்களின் கருத்துக்கள் பெறப்பட்டன. இவ்வாறு வழங்கப்பட்ட கருத்துக்களையடுத்து குறித்த சட்டமூலத்தின் தற்போதைய கட்டமைப்பு அதன் உண்மையான நோக்கத்தை நிறைவேற்றாது என்பதை நிதி அமைச்சு ஏற்றுக்கொண்டது. இந்தச் சட்டமூலம் கவனக் குறைவாக நுண்நிதி செயற்பாடுகளை முடக்கிவிடும் என்ற அச்சம் வெளிப்படுத்தப்பட்டது.

இந்தச் சட்டமூலத்தை மீளப்பெற்று அதனை மீள்வரைபு செய்வது குறித்த நிதி அமைச்சின் முடிவு வெளிப்படையான மற்றும் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய கொள்கை வகுப்பிற்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. பல்வேறு பங்குதாரர்களையும் உள்ளடக்கிய கலந்துரையாடல்களை நடத்துவதன் மூலம் அரசாங்க நிதி பற்றிய குழு சாத்தியமான சிக்கல்களைக் கண்டறிந்ததுடன், நேர்மறையான விளைவை அடைவதற்கான ஒரு கூட்டுச் சூழலை ஏற்படுத்தியுள்ளது.

குழுவின் தலையீடு ஒரு ஜனநாயக அமைப்பில் பாராளுமன்றம் வகிக்கும் முக்கிய பங்கையும் எடுத்துக்காட்டியுள்ளது. சட்டத்தை மேற்பார்வை செய்யும் செயற்பாடுகள் மூலம் முன்மொழியப்பட்ட கொள்கைகள் பரந்துபட்டதாக இருக்கும் என்பதும், அவை பொதுமக்களின் சிறந்த நலன்களுக்கு எவ்வாறு சேவையாற்றும் என்பதும் அரசாங்க நிதி பற்றிய குழுவின் அர்ப்பணிப்பான சேவையின் மூலம் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

நுண்நிதிய நிறுவனங்கள் மற்றும் சிறிய, நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் ஆகியோருக்கு ஆரோக்கியமான சூழலை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து பங்குதாரர்களுடனும் விரிவான கலந்துரையாடல்களை நடத்தி இச்சட்டமூலத்தை மீண்டும் வரைபு செய்வதாக நிதி அமைச்சு இங்கு தெரிவித்தது.

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ரவூப் ஹக்கீம், கௌரவ நிமல் லன்சா, கௌரவ சந்திம வீரக்கொடி, கௌரவ துமிந்த திசாநாயக்க, கௌரவ மயந்த திசாநாயக்க, கௌரவ (கலாநிதி) பிரதீப் உந்துகொட, கௌரவ மதுர விதானகே ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

1 2

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom