இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

துறைமுக நகர தீர்வை வரி அற்ற வர்த்தகத் தொகுதி தொடர்பான சட்டங்களை தயாரிப்பது பற்றி சட்டமா அதிபரின் கருத்து மற்றும் துறைமுக நகர ஆணைக்குழுவின் கருத்து தொடர்பில் ஒரு தீர்மானத்துக்கு வரவும் - விரைவாக தலையிடுமாறு அமைச்சின் செயலாளருக்கு அரசாங்க நிதி பற்றிய குழு அறிவிப்பு

திகதி : 2024-03-13

  • துறைமுக நகர தீர்வை வரி அற்ற வர்த்தகத் தொகுதியினால் இந்நாட்டின் வர்த்தகங்களுக்கு ஏற்படக்கூடிய தாக்கம் மற்றும் வரி செயன்முறைக்கு ஏற்படும் தாக்கம் தொடர்பில் விரிவான ஆய்வை மேற்கொண்டு அறிக்கை வழங்குமாறும் அறிவுறுத்தல்
  • அரசாங்க நிதி தொடர்பான குழுவின் முன்னைய கூட்டங்களுக்கு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் தலைவர் பங்கேற்காதது குறித்து அதிருப்தி - எதிர்வரும் கூட்டங்களில் ஆணைக்குழுவின் குறைந்தது மூன்று உறுப்பினர்களாவது பங்கேற்க வேண்டும் எனவும் தீர்மானம்

 

கொழும்பு துறைமுக நகரத்தில் ஸ்தாபிக்கப்படவுள்ள தீர்வை வரி அற்ற வர்த்தகத் தொகுதி தொடர்பான சட்டங்களை தயாரிப்பது பற்றி சட்டமா அதிபரின் கருத்து மற்றும் ஆணைக்குழுவின் கருத்து ஒன்றுக்கொன்று முரணானது என்பதால் அது தொடர்பில் ஒரு தீர்மானத்துக்கு வருவதற்கு விரைவாகத் தலையிடுமாறு முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளருக்கு அரசாங்க நிதி பற்றிய குழு அறிவிப்பு விடுத்தது.

பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழு நேற்று (மார்ச் 12) கூடிய போது தீர்வை வரி அற்ற வர்த்தகத் தொகுதியை அமைப்பது தொடர்பில் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் சட்டரீதியான அதிகாரம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன் இதன்போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.

தீர்வை வரி அற்ற வர்த்தகத் தொகுதி தொடர்பான புதிய ஒழுங்குவிதிகளை அனுமதிக்காக அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் பதில் செயலாளர் அனோஜா ஹேரத் தெரிவித்தார். தீர்வை வரி அற்ற பொருட்கள் 5000 டொலர் வரை நியமிப்பதற்கு ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என சட்டமா அதிபர் அறிவித்துள்ளதாக குழுவின் தலைவர் இதன்போது குறிப்பிட்டார். இவ்வாறான நிலையில், துறைமுக நகர ஆணைக்குழுவினால் சேவை பெற்றுக்கொள்ளப்பட்ட தனியார் சட்ட நிறுவனம் ஒன்று துறைமுக நகர ஆணைக்குழுவிற்கு தீர்வை வரி அற்ற வர்த்தகத் தொகுதி தொடர்பில் சட்டமியற்றுவதற்கு முழு சட்ட அதிகாரம் இருப்பதாகவும் சட்டமா அதிபரின் கருத்து தவறானது எனவும் நிதி பற்றிய குழுவிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக கெளரவ (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். சட்டமா அதிபரின் கருத்து தவறானது என இவ்வாறான தனியார் சட்ட நிறுவனம் ஊடாக அறிவிப்பது சிக்கலானது எனவும் பாராளுமன்றத்தின் அங்கீகாரம் இன்றி சட்டங்களை உருவாக்கும் அதிகாரத்தை மேற்கொள்வது சிக்கலானது எனவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

துணைச்சட்டங்களை தயாரிக்கும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு இருந்தாலும் இவ்வாறான கட்டுப்பாடற்ற அதிகாரங்கள் (unfettered powers) இல்லை என இதன்போது கலந்துகொண்ட சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன், தீர்வை வரி அற்ற வர்த்தகத் தொகுதியில் பொருட்களை கொள்வனவு செய்யும் முறை, அதன் பிரயோகரீதியான தன்மை மற்றும் தாக்கம் தொடர்பில் குழு விரிவாகக் கேள்வியெழுப்பியது. அதன்மூலம், இந்நாட்டிலுள்ள பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிறுவனங்களுக்கு ஏற்படும் தாக்கம் மற்றும் நிதி அமைச்சுடன் சம்பந்தப்பட்ட வரி செயன்முறைக்கு ஏற்படும் தாக்கம் தொடர்பில் விரிவான ஆய்வை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டது.

அத்துடன், நிதி பற்றிய குழுவினால் இது தொடர்பில் இதற்கு முன்னர் கவனம் செலுத்தப்பட்டு அனுமதி வழங்கப்படாமை காரணமாக தீர்வை வரி அற்ற வர்த்தகத் தொகுதியை ஸ்தம்பிப்பது மிகவும் சரியான முறையில் மேற்கொள்வதற்கு வழியமைத்தது எனவும் அது தொடர்பில் நிதி பற்றிய குழு என்ற அடிப்படையில் மகிழ்ச்சியடைய முடியும் என குழுவின் தலைவர் தெரிவித்தார்.

அரசாங்க நிதி தொடர்பான குழுவின் முன்னைய கூட்டங்களுக்கு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் தலைவர் பங்கேற்காதது குறித்து இதன்போது குழுவின் தலைவர் அதிருப்தி வெளியிட்டார். ஆணைக்குழுவின் தலைவருக்கு கலந்துகொள்ளுமாறு விசேடமாக அறிவிக்கப்பட்டிருந்தால் தலைவர் கலந்துகொள்வார் எனவும், பிரதமரின் தலைமையில் நிகழ்வொன்று நடப்பதால் இந்தக் கூட்டத்தில் தலைவர் கலந்துகொள்ளவில்லை என ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், எதாவது முக்கியமான விடயங்களைக் கலந்துரையாடும் போது தலைவர் உள்ளிட்ட ஆணைக்குழு உறுப்பினர்களின் பங்கேற்பு முக்கியமானது எனவும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், ஒவ்வொரு தினங்களில் ஆணைக்குழுவின் பல்வேறு உறுப்பினர்கள் வருவதாகவும் எதிர்காலத்தில் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு ஆணைக்குழுவின் 7 உறுப்பினர்களில் குறைந்தளவு 3 உறுப்பினர்களாவது கலந்துகொள்ள வேண்டும் என இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நிரந்தர அதிகாரி ஒருவர் நியமிக்கப்படாமை குறித்தும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், துறைமுக நகரின் காணிகளுக்கு தற்காலிக அனுமதிப்பத்திரம் வழங்குவது சட்டத்திற்கு முரணானது என சட்டமா அதிபர் அறிவித்துள்ள போதிலும், அது தொடர்ந்தும் இடம்பெறுவதாக குழு சுட்டிக்காட்டியது. தற்காலிக அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கையை சட்டபூர்வமாக்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென குழு சுட்டிக்காட்டியது.இதற்கு முன்னரும் இது தொடர்பான பரிந்துரைகளை குழு வழங்கியிருந்தால் ஒரு வாரத்திற்குள் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவிக்கப்பட்டது.

அத்துடன், துறைமுக நகர அபிவிருத்தி நடவடிக்கைளை கட்டுப்படுத்துவது தொடர்பான ஒழுங்குவிதிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் தொடர்பான வர்த்தமானியை பரிசீலனை இதன்போது கருத்திற்கொள்ளப்பட்டு  அனுமதி வழங்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர்களான கௌரவ அனூப பஸ்குவல், கௌரவ சீதா அறம்பெபோல, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ துமிந்த திசாநாயக்க, கௌரவ மயந்த திசாநாயக்க, கௌரவ (கலாநிதி) நாளக கொடஹேவா ஆகியோரும், சட்டமா அதிபர் திணைக்களம், கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

1 2

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom