இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

எக்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துத் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதில் நிறுவனங்களுக்கிடையில் சரியான ஒருங்கிணைப்பு இல்லை – துறைசார் மேற்பார்வைக் குழுவில் தெரியவந்தது

திகதி : 2024-01-02

எக்ஸ்பிரஸ் பேர்ள் பேரழிவுக்கான இழப்பீட்டைப் பெற்றுக்கொள்வதில் தற்போதைய முன்னேற்றம் மற்றும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் உதவியைப் பெற்றுக் கொண்டு சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பை மதிப்பீடு செய்யும் பணியை எதிர்காலத்தில் முன்னெடுப்பதா என்பது தொடர்பில் சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அஜித் மான்னப்பெரும தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.

கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டிய விதம் மற்றும் அதன் எதிர்காலத் தேவை குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு கடிதம் மூலம் வினவியிருந்தபோதும், இது தொடர்பில் தமக்கு இதுவரை எவ்விதமான பதிலும் கிடைக்கவில்லையென அந்நிறுவனத்தின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இருந்தபோதும் பாதிப்பை மதிப்பீடு செய்யும் பணியைத் தொடர சர்வதேச, சுயாதீன நிபுணர் குழு நியமிக்கப்பட்டு மேலதிக பணிகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக நீதி அமைச்சிடமிருந்து தமக்குத் தகவல் வழங்கப்பட்டிருப்பதாகவும், அதன் விளைவாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் உறுதியான முடிவொன்று இல்லையென்றும் அந்நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், இது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் மேற்கொண்டு வரும் பணிகளை தமது நிறுவனத்துக்குத் தெரியப்படுத்தப்படாமல் இருப்பதும் பிரச்சினையாக உள்ளது என கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் மதிப்பீடுகளுக்கான கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படவில்லையென்றும், அதற்கான பணத்தை வழங்கக்கூடிய வாய்ப்புக்கள் குறித்து ஆராய்வதற்கு அமைச்சரவைப் பத்திரமொன்றை  சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டிருப்பதுடன், 2023ஆம் ஆண்டுக்கு நிபுணர்கள் குழுவுக்கான நியமனங்கள் மேற்கொள்ளப்படவில்லையென்பதும் இங்கு புலப்பட்டது.
இந்தக் குழுவின் அமர்வில் கலந்துகொண்ட நிபுணர்கள் குழுவின் இணைத் தலைவர் பேராசிரியர் அஜித் டி அல்விஸ், தனது கல்வித் தகுதிகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களிடம் விசாரிக்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டினார். நிபுணர்கள் குழுவிற்கு நியமிக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்களின் நியமனம் மற்றும் அவர்களின் கல்வித் தகுதிகள் குறித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் வினவப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபையின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.

கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை, கடற்றொழில் அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றுக்கு இடையில் சரியான ஒருங்கிணைப்பு இல்லாமை குறித்தும் குழுவில் கரிசனை தெரிவிக்கப்பட்டது. இதனால் கடற்றொழில் இழப்பீடுகளை பெற்றுக்கொள்வதற்கும் சிக்கல்கள் பல எழுந்துள்ளதாக குழுவில் புலப்பட்டது. எனவே, சட்டமா அதிபர் திணைக்களம், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை, கடற்றொழில் அமைச்சு கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையினால் நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து  எதிர்காலத் திட்டமொன்றைத் தயாரித்து அது பற்றி குழுவுக்கு அறிக்கையளிக்குமாறு குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.

மேலும், இந்த கப்பல் விபத்தால் ஏற்பட்ட பேரழிவு உலகில் மைக்ரோ பிளாஸ்டிக்கால் ஏற்பட்ட மிகப்பெரிய அழிவு என்பதால், இது குறித்து மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும், என்பதால் நிபுணர் குழுவின் ஆய்வுக்கு அனுமதி வழங்கவும் அமைச்சரவையிடம் கோரிக்கை விடுப்பதற்கும், அதற்கான வசதிகளை வழங்குவதற்கு இங்கு முடிவுசெய்யப்பட்டது.

இந்தக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (வைத்தியகலாநிதி) திலக் ராஜபக்ஷ, கௌரவ அகில எல்லாவல, கௌரவ வருண லியனகே, கௌரவ நாளக பண்டார கோட்டேகொட ஆகியோரும், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை, சுற்றாடல் அமைச்சு உள்ளிட்டவற்றின் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

 

soc-env

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom