குழந்தைகள் உடைய தாய்மார் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வதால் ஏற்படுகின்ற சமூகத்தாக்கம் அதிகம் - சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடல் |
திகதி : | 2023-12-18 |
- பகல்நேர பராமரிப்பு மையங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் கண்காணிப்பதற்குமான கட்டமைப்பு இல்லாமை மற்றும் பகல்நேர பராமரிப்பு மையங்கள் முறையாகப் பதிவுசெய்யப்படாமை என்பன சிக்கலுக்குரியவை
இலங்கையில் தொழில்புரியும் பெண்களுடைய 0-5 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புத் தொடர்பில் தற்பொழுது காணப்படும் பிரச்சினைகள் மற்றும் பரிந்துரைகள் குறித்துப் பாராளுமன்றத்தில் எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை பற்றி துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது. சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 0-5 வயதுக்கு இடைப்பட்ட குழந்தைகள் தாயின் பாதுகாப்பு இன்றி வளர்ந்துவரும் சூழ்நிலையில் ஏற்படுகின்ற சமூகத்தாக்கம் எதிர்வரும் 20-25 வருடங்களில் சமூகம் என்ற ரீதியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பிலும் சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.
சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தலதா அத்துகோரல தலைமையில் கடந்த டிசம்பர் 8ஆம் திகதி கூடியது.
02/2023 ஆம் இலக்க அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைய 02 வயது மற்றும் அதற்கு மேலான வயதையுடைய குழந்தைகளைக் கொண்ட தாய்மார் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதுடன், இதனால் குழந்தைகள் தாய்ப்பால் பெறும் திறனை இழப்பதுடன், தாய்க்கும் சேய்க்கும் இடையிலான இணைப்பு இழக்கப்படுவதாகக் குழு சுட்டிக்காட்டியது.
மேலும், சிறுவயதிலேயே தாயைப் பிரிந்திருப்பதால் எதிர்காலத்தில் மிகவும் சண்டை சச்சரவுகள் நிறைந்த தலைமுறை உருவாகும் என்றும், தாய் வெளிநாடு செல்வதால் குழந்தைப் பருவம் முதலே பிள்ளைகளுக்கு அரவணைப்புக் கிடைக்காமையால் அவ்வாறான பிள்ளைகள் எதிர்காலத்தில் போதைப்பொருள் மற்றும் ஏனைய குற்றச்செயல்களுக்கு அடிமையாவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும், ஏனையவர்களின் பராமரிப்பில் கீழ் இருக்கும்போது அயல்வீட்டார்கள் மாத்திரமன்றி, தந்தை, பேரன் போன்ற நெருங்கிய உறவினர்களாலேயே அவ்வாறான குழந்தைகள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதற்கான சந்தர்ப்பங்கள் இருப்பதாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
சிறுவயதிலேயே குழந்தைகளுக்கான பாதுகாப்பான மற்றும் முறையான பரிந்துரைகளின் அடிப்படையில் செயல்படும் பகல்நேர பராமரிப்பு மையங்களின் வலுவான தேவை உள்ளது என்றும், இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டது. மேலும் பகல்நேர பராமரிப்பு மையங்களை ஒழுங்குறுத்துவதற்கும், கண்காணிப்பதற்கும் குறிப்பிட்ட நிறுவனம் இல்லை எனவும், பகல்நேர பராமரிப்பு மையங்கள் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை என்றும், இவற்றின் தரங்களில் குறைபாடுகள் இருப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்ட இலங்கையில் உள்ள பகல்நேர சிறுவர் பராமரிப்பு நிலையங்களுக்கான தேசிய வழிகாட்டுதல்களின் விதிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மேற்கண்ட பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும் என குழு கருத்து தெரிவித்தது.
இதன்படி, இலங்கையில் உள்ள பகல்நேர பராமரிப்பு நிலையங்களின் தரத்தை ஒழுங்குபடுத்தவும், 05 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட தாய்மார்கள் வெளிநாடு செல்வதை தடுக்கும் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்தவும் சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பரிந்துரைத்தது.
இந்த அமர்வில் துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்களான கௌரவ முதிதா பிரசாந்தி, கௌரவ டளஸ் அழகப்பெரும, கௌரவ டி.வீரசிங்ஹ, கௌரவ மஞ்சுளா திசாநாயக மற்றும் குழுவின் உறுப்பினர் அல்லாத பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜே.சி.அலவத்துவல ஆகியோர் கலந்துகொண்டனர்.
அத்துடன், மகளிர், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தைத் திணைக்களம், முன் பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் ஆகியோரும் துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்








