இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

மனித-யானை மோதல்களைக் குறைப்பதற்கான தேசிய செயல் திட்டம் சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் கையளிப்பு

திகதி : 2023-12-09

  • யானை - மனித மோதலுக்கு சமூகம் சார்ந்த மின்சார வேலிகள், நெற்பயிர்களை பாதுகாக்கும் தற்காலிக மின்வேலிகளே தீர்வு - யானை மனித மோதல் செயல் திட்டத்தை உருவாக்கியவர்கள் குழுவிடம் தெரிவிப்பு


மனித-யானை மோதல்களைக் குறைப்பதற்கான தேசிய செயல் திட்டம் சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் கையளிக்கப்பட்டது. குறித்த குழு கடந்த நவம்பர் 28ஆம் திகதி அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அஜித் மானப்பெரும தலைமையில் கூடியபோதே இவ்வாறு கையளிக்கப்பட்டது. இங்கு யானை மனித மோதல்களை குறைப்பதற்கான தேசிய செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பை வழங்குதல் மற்றும் மேற்பார்வை செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் கலாநிதி சுமித் பிலபிட்டிய மற்றும் வனவிலங்குகள் விஞ்ஞானி கலாநிதி ப்ருத்விராஜ் பெர்னாந்து ஆகியோரினால் இந்த செயல்திட்டம் குழுவில் முன்வைக்கப்பட்டது.

2022ஆம் ஆண்டில் இந்நாட்டில் 433 காட்டு யானைகள் உயிரிழந்திருப்பதாக இங்கு தெரிவிக்கப்பட்டது. இந்நாட்டில் உள்ள நிலப்பரப்பில் 62 வீதமான பிரதேசத்தில் காட்டு யானைகள் பரவிக்காணப்படுவதாக வனவிலங்கு விஞ்ஞானிகள் குழுவில் கருத்துத் தெரிவித்தனர். யானை மனித மோதலை குறைப்பதற்கு மின்சார வேலிகள் பரீட்சார்த்தமான முறையில் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காடடினர். இதன்படி, யானை மனித மோதலைக் குறைப்பதற்கான தேசிய செயல்திட்டத்தை தயாரிப்பதில் மிகவும் பொருத்தமான தீர்வாக, சமூகத்தின் தலைமையில் கிராமிய மின்வேலியாகவும், நெற்பயிர்களைப் பாதுகாக்க தற்காலிக வேலியாக மின்சார வேலிகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் குழுவில் சுட்டிக்காட்டப்பட்டது.

இவ்வாறு யானைகளைத் தடுப்பதற்கான வேலிகளை அமைப்பதற்கு முன்னர் யானைகளின் நடத்தை மற்றும் மக்களின் நடத்தையில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து அந்தந்தப் பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதன் அவசியத்தைக் குழுவின் தலைவர் வலியுறுத்தினார். மக்களை விழிப்புணர்வூட்டுவதற்கு முன்னெடுக்கக் கூடிய யோசனைகளை முன்வைக்குமாறு குழுவில் சமுகமளித்திருந்த வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச் சூழல் அமைப்புக்களிடம் குழுவின் தலைவர் கேட்டுக்கொண்டார். யானை-மனித மோதல்கள் உள்ள பகுதிகளைச் சரியாக கண்டறிந்து தகவல் அளித்தால் அதற்கு பங்களிக்க முடியும் என வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

குழு முன்னிலையில் கருத்துத் தெரிவித்த எதிர்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, யானை மனித மோதல்களைக் குறைப்பதற்கு தேசிய நிலப் பயன்பாட்டுத் திட்டம் அவசியம் எனத் தெரிவித்தார். கிராமிய மட்டத்தில் யானைகள் நடமாடும் பகுதியை சரியாக இனங்காண வேண்டியதன் முக்கியத்துவத்தையும், யானைகள் - மனித மோதல்கள் அதிகம் உள்ள பிரதேச செயலகங்களை இனங்கண்டு கொள்வதன் முக்கியத்துவத்தையும், யானைகள் கணக்கெடுப்பு நடத்துவதன் நோக்கம் குறித்துக் கவனம் செலுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இக்கூட்டத்தில், குழுவின் உறுப்பினர்களான கௌரவ வருண லியனகே, கௌரவ திலக் ராஜபக்ஷ ஆகியோரும், குழுவின் தலைவருடைய அனுமதியுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சந்திம வீரக்கொடி, கௌரவ சிந்தக அமல் மாயாதுன்ன ஆகியோரும், வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகள், தன்னார்வ அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

 

5 11

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom