மென்பொருள் மற்றும் டிஜிட்டல் சேவை வழங்குனர்களுக்கான பெறுமதி சேர் வரி குறித்த சர்வதேச நடைமுறைக்கு அமைய வணிகம் செயற்படும் இடத்துக்கு அல்ல நுகர்வோர் இருக்கும் இடத்துக்கான சட்டவரம்பே ஏற்புடையது : ஆசிய இணையக் கூட்டணி அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவுக்கு அறிவிப்பு |
திகதி : | 2023-12-09 |
மென்பொருள் மற்றும் டிஜிட்டல் சேவை வழங்குனர்கள் மீதான பெறுமதி சேர் வரியை ஏற்றுக் கொள்வதற்கான சர்வதேச பொதுத்திட்ட அளவு வணிகம் செயற்படும் இடத்துக்கான சட்ட ஆட்சி எல்லையை அடிப்படையாகக் கொண்டது அல்ல, நுகர்வோர் இருக்கும் இடத்துக்கான சட்ட வரம்பை அடிப்படையாகக் கொண்டது என ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் இணையம் தொடர்பான கொள்கைச் சிக்கல்களைப் புரிந்துகொள்வதற்கும் அவற்றுக்கான தீர்வுகளை ஊக்குவிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கும் அமைப்பான ஆசிய இணையக் கூட்டணி, அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு அறிவித்துள்ளது.
பெறுமதி சேர் வரி (திருத்த) சட்டமூலத்தின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் போது உள்நாட்டு மென்பொருள் மற்றும் டிஜிட்டல் சேவை வழங்குனர்களுக்கு எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துவது என்பது தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் கலந்துரையாடியபோது மேற்குறித்த விடயம் பற்றி ஆராயப்பட்டது.
கடந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்களின் நீடிப்பாக அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா அண்மையில் (டிச. 07) கூடியபோது, உள்நாட்டு மற்றும் சர்வதேச மென்பொருள், டிஜிட்டல் சேவை வழங்குனர்களான பிக்மீ, ஊபர், ஆசிய இணையக் கூட்டணி (மீட்டா, கூகுள், எக்ஸ், புக்கிங்.கொம், அமேசன் ஆகியவற்றின் சார்பில்) மற்றும் டராஸ் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.
மென்பொருள் மற்றும் டிஜிட்டல் சேவை வழங்குனர்கள் தற்பொழுது பெறுமதி சேர் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ள போதும், 2024 ஜனவரி 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் பெறுமதி சேர் வரி (திருத்தச்) சட்டமூலத்தில் இந்த வரிவிலக்கு நீக்கப்பட்டுள்ளது என்றும், இதனால் கடல் கடந்துள்ள வணிகங்களை விட இந்நாட்டிலுள்ள வணிகளுக்கு பாதகம் ஏற்படும் என்பதும் இங்கு தெரியவந்தது.
அத்தகைய கொள்கை முடிவுகள் வணிகங்கள் தமது செயற்பாடுகளை உள்நாட்டிலிருந்து மேற்கொள்வதை ஊக்கப்படுத்தாது என்றும், அவ்வாறான வணிகங்கள் கடல்கடந்து தமது செயற்பாடுகளை முன்னெடுக்கத் தொடங்கினால் அரசாங்கத்திற்குக் கிடைக்கும் வருமானத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், டிஜிட்டல் சேவை வழங்குனர்கள் மற்றும் புதிய தொடக்கங்களைத் தடுக்கும் என்பதும் குழுவின் நிலைப்பாடாக இருந்தது. இதற்கமைய, ஆசிய இணைய கூட்டணியினால் முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கருத்தில் கொள்ளுமாறு நிதி அமைச்சுக்குப் பணிப்புரை வழங்கிய குழு, 2023 டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் அறிக்கையொன்றைக் கையளிக்குமாறும் அறிவுறுத்தியது.
மேலும், நிதி பற்றிய குழு ஐந்து கட்டளைகள் மற்றும் ஒழுங்கு விதிகள் பற்றியும் ஆராய்ந்தது. இதற்கு அமைய 2347/06 இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10வது பிரிவின் கீழான கட்டளை, 2345/64, 2346/16, 2348/44 மற்றும் 2353/77 இலக்கங்களைக் கொண்ட வர்த்தமானி அறிவித்தல்களில் பிரசுரிக்கப்பட்ட சிறப்புப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான ஐந்து கட்டளைகள் என்பன குழுவினால் ஆராயப்பட்டன.
கோதுமை மற்றும் பாசிப்பயறு போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பாதிக்கும் வரிகளில் அதிகரிப்பு அல்லது குறைப்பை மேற்கொள்வது குறித்த கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட தரப்பினரின் உதவியுடன் ஆழமான பகுப்பாய்வுகளை நிதி அமைச்சு மேற்கொள்ள வேண்டும் என்றும் குழு வலியுறுத்தியது.
மேலும், 2021ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க இலங்கை கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளின் கீழ் கொழும்பு துறைமுக நகரத்தில் அமைக்கப்படவுள்ள டவுன் – டவுன் சேவை விலக்களிப்பு (Down – Town Duty Free) கட்டமைப்புக் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அதன்படி, அமைக்கப்படவுள்ள டவுன் – டவுன் சேவை விலக்களிப்பானது முக்கியமாக சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 70% சுற்றுலா நுகர்வோரை இலக்காகக் கொண்டுள்ளது என்பதுடன், உலகளாவிய ரீதியில் பிரபல்யமாக உள்ள வர்த்தக நாமங்கள் உள்ளிட்ட 25 தயாரிப்புக்களை உள்ளடக்கியிருக்கும்.
இந்த ஒழுங்கு விதியில் சில பிரிவுகளில் இறக்குமதி செய்யப்படக்கூடிய பொருட்களின் பட்டியல்கள் விதிகளாக உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும், இவற்றுக்கு சட்ட ரீதியான ஏற்றுக்கொள்ளல்கள் இல்லையென்றும் குழு சுட்டிக்காட்டியது. எனவே, எழக்கூடிய இடைவெளிகளைத் தவிர்க்கவும், மக்கள் அதைப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் ஒழுங்குமுறை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று குழு தெரிவித்தது. இதன்படி கலந்துரையாடப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு திருத்தப்பட்ட பதிப்பை வெளியிடுமாறும் குழு பணிப்புரை விடுத்தது.
இக்குழுக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ (வைத்திய கலாநிதி) சீதா அரம்பேபொல, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சமிந்த வீரக்கொடி, கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே, கௌரவ வஜிர அபேவர்தன, கௌரவ நிமல் லன்சா, கௌரவ பிரேம்நாத் சி தொலவத்த, கௌரவ மதுர விதானகே ஆகியோர் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்









