விலைகள் அதிகரிப்பதால் போட்டி நிறைந்த இன்றைய சந்தையில் போக்குவரத்து சபையின் பேரூந்துகளுக்கு டயர்களை கொள்வனவு செய்வதில் சிக்கல்கள் காணப்படுவதாக கோபா குழுவில் புலப்பட்டது |
திகதி : | 2022-07-07 |
- இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 160 ரயில் பெட்டிகளில் 103 பெட்டிகள் இன்னமும் பயன்படுத்தப்படவில்லை
- சில தனியார் பேரூந்துகளுக்காக வழங்கப்பட்ட டீசல்கள் அதிக விலையில் மீள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டு
விலைகள் அதிகரிப்பதால் போட்டி நிறைந்த தற்போதைய சந்தையில் இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேரூந்துகளுக்கு டயர் உள்ளிட்ட ஏனைய உதிரிப்பாகங்களைக் கொள்வனவு செய்வதில் சிக்கல்கள் நிலவுவது தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் புலப்பட்டது.
நாட்டில் தற்பொழுது நிலவும் நெருக்கடியான பொருளாதார சூழ்நிலையில் பொது மக்களுக்கு வினைத்திறனான முறையில் போக்குவரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களின் தற்போதைய நிலவரம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் நோக்கில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) திஸ்ஸ விதாரண தலைமையில் அண்மையில் (05) கூடியபோதே இந்தத் தகவல்கள் வெளிப்பட்டன.
அமைச்சின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் அதிகாரிகள் குழுவிற்கு விளக்கமளித்தனர். பயன்பாட்டில் உள்ள பேரூந்துகளின் தரம் மற்றும் அவற்றை இயக்குவதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து குழுவின் உறுப்பினர்கள் கேட்டறிந்துகொண்டனர். போட்டி நிறைந்த இன்றைய சந்தையில் பேரூந்துகளுக்குத் தேவையான உதிரிப்பாகங்களைப் பெற்றுக் கொள்வது சிக்கல் நிறைந்தது என வருகை தந்திருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். இவற்றுக்கான கேள்விப் பத்திரங்களைக் கோரி அவற்றின் ஊடாக கொள்முதல் செயற்பாடுகளை மேற்கொள்வதில் சிக்கல் இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அரசின் போக்குவரத்து சேவையை மேலும் விஸ்தரிக்கவேண்டியிருக்கின்றபோதும், தற்பொழுது காணப்படும் சூழ்நிலையின் கீழ் விலை அதிகரிப்புக் காணப்படுவதால் உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்வதில் சிக்கல்கள் காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், 2017ஆம் ஆண்டு இந்தியாவின் கடன் மானியத்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டிருந்த புகையிரதப் பெட்டிகள் பல வருடங்கள் காலதாமதமாகி இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. விசேடமாக கொள்வனவு செய்யப்பட்ட 160 புகையிரதப் பெட்டிகளில் 103 பெட்டிகள் இதுவரை பயன்படுத்தப்படாமை குறித்து கோபா குழு, அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியது. இந்நாட்டில் வக்கியூம் பிரேக் முறைமை பயன்படுத்தப்படுகின்றபோதும், சில பெட்டிகள் எயார் பிரேக் முறைமையைக் கொண்டிருப்பது இதற்குக் காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர். பொருத்தமில்லாத பிரேக் முறைமையைக் கொண்ட புகையிரதப் பெட்டிகளைக் கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கியவர்கள் யார் என்பது தொடர்பில் கோபா குழுவின் அதிகாரிகள் வினவினர். இதற்கமைய அதிகாரிகள் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் என இங்கு குறிப்பிடப்பட்டது.
அதேநேரம், தற்போதைய நாட்களில் இலங்கைப் போக்குவரத்து சபையின் டிப்போக்களுக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தனியார் பேரூந்துகளுக்கு டீசல் வழங்குவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இவ்வாறு டீசலைப் பெற்றுக்கொண்ட சில தனியார் பேரூந்துகள் அவற்றை வெளியாருக்கு அதிக விலையில் விற்பனை செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பேரூந்துகளை வீதியில் சேவைக்கு ஈடுபடுத்தி ஈட்டும் வருமானத்தைவிட டீசல் விற்பனை மூலம் பேரூந்து உரிமையாளர்கள் அதிக இலாபம் சம்பாதித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
எனவே, இவ்வாறான நிலைமையக் கட்டுப்படுத்தி பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதை தடுக்க வேண்டும் எனவும், எரிபொருள்களை சேகரிக்கும் நோக்கில் பேரூந்துகள் செயற்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் முறைமையொன்று தயாரிக்கப்பட வேண்டும் என்றும் குழு வலியுறுத்தியது. குறிப்பாக பேரூந்துகளைக் கண்காணிப்பதற்கு ஜீ.பீ.எஸ். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இதற்கு மேலதிகமாக, 2017 ஆம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ் தயாரிக்கப்பட்ட இலங்கை புகையிரத பிரதான திட்டத்துக்கு 1,056,555 அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளபோதும் இந்த நிதியுதவி அமைச்சின் வரவுசெலவுத்திட்டத்தில் அல்லது நிதி அறிக்கையில் உள்ளடக்கப்படாமை இங்கு புலப்பட்டது. இதற்கமைய இது தொடர்பில் அறிக்கையொன்றை கோபா குழுவுக்கு வழங்குமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டது. அத்துடன், புகையிரதப் போக்குவரத்துக் கட்டமைப்பை புதிய தொழில்நுட்பத்துடன் இணைப்பது பற்றியும் கலந்துரையாடல் இடம்பெற்றது.
கோபா குழுவின் உறுப்பினர்களான கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, கௌரவ லசந்த அழகியவன்ன, கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ (வைத்தியகலாநிதி) சுதர்ஷனி பெர்னாந்துபுள்ளே, கௌரவ நிரோஷன் பெரேரா, கௌரவ துமிந்த திஸாநாயக்க, கௌரவ பீ.வை.ஜீ ரத்னசேகர மற்றும் கௌரவ (கலாநிதி) ஹரிணி அமரசூரிய ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்










