இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் ஆரம்பிக்கப்பட்டு தற்போது முடங்கியுள்ள செயற்திட்டங்களை வெற்றிகரமான வருமானம் ஈட்டும் நிலைக்கு உடனடியாக கொண்டுவர வேண்டும் – கோப் குழுவின் தலைவர் பரிந்துரை

திகதி : 2022-06-10

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட, அபிவிருத்தி செய்யப்பட்டு, நிதியுதவி பெற்று தற்போது முடங்கியுள்ள செயற்றிட்டங்களை வெற்றிகரமாக நிறைவுசெய்து நாட்டை மீண்டும் வருமானம் ஈட்டும் வகையில் மாற்றியமைக்க வேண்டுமென அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவர் (கோப் குழு)  பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத்  நகர அதிகார சபையின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுக்கான கணக்காய்வறிக்கை மற்றும் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நகர அதிகாரசபையின் அதிகாரிகள் அண்மையில் கூப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டபோதே இந்த ஆலோசனை வழங்கப்பட்டது.
இதன்போது நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழுள்ள மற்றும் மேற்பார்வையிலுள்ள பல திட்டங்கள் வெற்றிகரமான இலாபம் ஈட்டும் நிலையில் இல்லை என்பது இதன்போது தெரியவந்தது. இதன்படி, ஹம்பாந்தோட்டை அபிவிருத்தித் திட்டம், மீதொட்டமுல்ல புத்துயிர் திட்டம், மில்லேவ நிலப்பரப்பிலிருந்து 812 ஏக்கரை பயன்படுத்தி  கைத்தொழில் பூங்கா அமைக்கும் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, ஹம்பாந்தோட்டை அபிவிருத்தித் செயற்திட்டத்தின்கீழ் ருஹுணுபுர சர்வதேச மாநாட்டு மண்டபம் நிர்மாணிக்க செலவிடப்பட்ட நிதி தொடர்பில் மற்றும் இதை மேலதிக நிதி பராமரிப்புக்கென 2017 முதல் 2019 வரை செலவிடப்பட்ட நிதி தொடர்பிலும் இதன்போது விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, 2017ஆம் ஆண்டு முதல் முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான செலவினமாக 75,889,769 ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன், 2017 முதல் 2019 வரை இதன் மூலம் பெறப்பட்ட வருமானம் ரூ.15,896,360 ஆகும். இது ஹம்பாந்தோட்டை நகர அபிவிருத்தி திட்டத்தின் ஒரு அங்கம் என நகர அபிவிருத்தி அதிகார சபையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர். எவ்வாறாயினும், பிரதான அபிவிருத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமையினால் இத்திட்டம் வெற்றியளிக்கவில்லை எனவும் இதன்போது தெரிவித்தனர். இவ்வாறு தொடர்ந்து நட்டமடைவதால் இரண்டு நிறுவனங்களினதும் நிர்வாக ஒதுக்கீட்டின் மூலம் இலாபம் ஈட்ட  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். ருஹுணுபுர சர்வதேச மாநாட்டு மண்டபத்தை வெளிநாட்டு நிதியுதவியின் கீழேயே நிர்மாணிக்கவுள்ளதாகவும் இத்திட்டத்திற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை ஆலோசனைகயை மாத்திரமே வழங்குவதாகவும் இத்திட்டத்திற்கு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான நிதி செலவிடப்படவில்லை எனவும் அவ் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.

இதன்போது கோப் குழுவின் தலைவர் இது தொடர்பில் ஆராய்ந்து வருமானம் ஈட்டும் மட்டத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்தார்.

மேலும், 2017 ஆம் ஆண்டு மீதொட்டமுல்ல மண்சரிவின் பின்னர் மீதொட்டுமுல்ல புத்துயிர் திட்டம் மூலமாக குப்பை மேட்டை பராமரிப்பதற்காக 30 முதல் 12 மீட்டர் வரை போர்வை அடுக்கு முறைமையை அமைப்பதற்கும், முறையான  வாயு வெளியேற்றல் அலகுகளை அமைப்பதற்கும், அதன் செயற்திறன் குறித்தும் 2020 ஆம் ஆண்டளவில் ரூ.269.5 மில்லியனை  தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்தமை தொடர்பிலும் இதன்போது விவாதிக்கப்பட்டது. ஆனால், தற்போது குறித்த குப்பைகள் கொட்டுவதற்கென அமைக்கப்பட்ட இடம் முறையான பராமரிப்பு மற்றும் கண்காணிப்பின்றி காணப்படுகின்றமை தெரியவந்துள்ளது. அதன்படி, இரண்டு மாதங்களுக்குள் இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோப் குழுவின் தலைவர் பரிந்துரை செய்தார்.

அத்துடன், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் உள்ள விடுமுறை விடுதிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன், நகர அபிவிருத்தி அதிகார சபையின்கீழ் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள விடுதிகள் அந்த மாவட்டத்தில் மிகவும் இரம்மியமான இடத்தில் அமைந்துள்ளதாக அக்குழுவிற்கு கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். எனவே, விலைமனுகோரல் கோரப்படும்போது அரசு வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டினர். இந்த உல்லாச விடுதிகளை வாடகைக்கு எடுப்பவர்கள் சில வேளைகளில் அரசியல் காரணங்களுக்காக பெற்றுக்கொள்வதாகவும் இக்குழுவில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இந்த ஓய்வு விடுதிகள் முறையற்ற பராமரிப்பின் காரணமாக பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. 2011ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ரெஸ்ட் ஹவுஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த ஓய்வு விடுதிகளின் செயற்பாடு குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது.

அதன்படி, குறித்த உல்லாச விடுதிகளை புனரமைப்பதற்கான திட்டத்தை உள்ளடக்கி ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோப் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

மேலும், கொழும்பில் நாளாந்தம் பிரவேசிக்கும் வாகனங்களை நிறுத்துவதற்கான பிரத்தியேக தரிப்பு பிரதேசங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் கொழும்பு நகருக்கு தினமும் வருகைதரும் மக்களின் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தேவையான வசதிகளை மேம்படுத்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. கொழும்பில் விஜேவர்தன மாவத்தையை அண்மித்துள்ள 2 ஏக்கர்  ரூட் 2 அளவிளான 21.4 பேர்ச் காணியை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நீண்டகால குத்தகை அடிப்படையில் தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. நகர்ப்புற நிலப் பயன்பாட்டுக் கொள்கைத்திட்டமொன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதில் அதிகாரசபை தவறியதையும் கோப் குழு இதன்போது அவதானத்தில் கொண்டது.

இக்குழுவில் அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர  பாராளுமன்ற உறுப்பினர்களான  கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க, கௌரவ ஜயந்த சமரவீர, கௌரவ (கலாநிதி) சரத் வீரசேக்கர, கௌரவ இந்திக்க அனுருத்த, கௌரவ சாகர காரியவசம், கௌரவ ரோஹித அபேகுணவர்தன, கௌரவ பிரேம்நாத் சி. தொலவத்த, கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், கௌரவ மதுர விதானகே மற்றும் கௌரவ எஸ்.எம். மரிக்கார் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

 

2 3

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom