இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இம்முறை மாத்திரம் மட்டுப்படுத்தப்படும் வகையில் பழைய தேர்தல் முறையிலாவது மாகாணசபைத் தேர்தல் நடத்துவது பொருத்தமானது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற விசேட குழுவில் தெரிவிப்பு

திகதி : 2021-12-02

இம்முறை மாத்திரம் மட்டுப்படுத்தப்படும் வகையில் பழைய தேர்தல் முறையிலாவது மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவது பொருத்தமானது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் இன்று (02) பரிந்துரைத்தது.

சுதந்திரக் கட்சி சார்பில் பாராளுமன்ற விசேட குழுவில் சாட்சியமளித்த இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிடுகையில், நீண்டகாலமாக மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமையால் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன் அடுத்த வருட முதலாவது காலாண்டுக்குள் மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆகக் கூடியது 5500 ஆக வரையறுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலத்தை நீடிப்பது பொருத்தமற்றது என அமைச்சர் மஹிந்த அமரவீர இங்கு சுட்டிக்காட்டினார். உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்பதே பொது மக்களின் நிலைப்பாடு என்றும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் நடத்தப்பட்டு புதிய உறுப்பினர்கள் பதவிச்சத்தியம் செய்யும்வரை குறித்த நிறுவனங்களின் அதிகாரம் ஆணையாளரின் கீழ் கொண்டுவரப்பட வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா இக்குழு முன்னிலையில் சுட்டிக்காட்டினார்.

தற்போதுள்ள சட்டத்தின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என சட்டமா அதிபர் கருதுவதாகவும், அதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் கொண்டுவரப்பட வேண்டுமெனவும் பாராளுமன்ற விசேட குழுவின் தலைவர் சபை முதல்வர், அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தலை துரிதமாக நடத்த வேண்டும் என்பதே குழுவின் பொதுவான கருத்து எனவும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் முறை திருத்தப்படும் போது தொகுதி வாரியில் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 60% ஆகவும் விகிதாசார முறையின் கீழ் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 40% ஆகவும் காணப்பட வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடாக இருந்தது.

தேர்தல் செலவுகளை குறைக்கத் தேவையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். ஜனாதிபதி கௌரவ கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தேர்தல் செலவினங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளமை பாராட்டுக்குரியது. அனைத்து மட்டங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கையில் 25 சதவீதமாக இருக்க வேண்டும் என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியது.

அத்துடன் தேர்தல் காலங்களில் ஊடகங்களின் நடத்தை ஒழுங்குறுத்தப்பட வேண்டும். சமூக ஊடக நடத்தையை ஒழுங்குபடுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தியது.

பாராளுமன்ற விசேட குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை மதிப்பாய்வு செய்வதற்கு
நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவின் தலைவர், ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின்

உபவேந்தர் பேராசிரியர் சுதந்த லியனகே கருத்துத் தெரிவிக்கையில், 70:30 விகிதாசார அடிப்படையில் புதிய தேர்தல் முறை தயாரிக்கப்படுமாயின் உள்ளூராட்சி மன்றங்களில் தற்பொழுது காணப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 1500 இனால் குறைக்கப்பட வேண்டும் என்றார். உள்ளுராட்சி பிரதேசத்தில் வெற்றி பெறும் அரசியல் கட்சிக்கு இரண்டு போனஸ் ஆசனங்கள் கிடைக்கும் வகையில் தேர்தல் முறைமை திருத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இக்குழுவின் அடுத்த கூட்டம் எதிர்வரும் 07ஆம் திகதி நடைபெறும் என பாராளுமன்ற விசேட குழுவின் செயலாளரும், பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் சேயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.

இன்றைய கூட்டத்தில் சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவண்ண மற்றும் துமிந்த திசாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர். இது தவிரவும் பாராளுமன்ற விசேட குழுவின் உறுப்பினர்களான அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சாகர காரியவசம், மதுர விதானகே ஆகியோர் கலந்துகொண்டனர். இதனைவிடவும், சட்டமா அதிபர் திணைக்களம், தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அதிகாரிகளும் இதில் இணைந்துகொண்டிருந்தனர்.

 

 1

2 3

4

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom