இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

நீதியான, சுதந்திரமான தேர்தலுக்குப் பக்கச்சார்பற்ற தேர்தல் பிரசாரம் முக்கிய காரணியாக அமையும் என பாராளுமன்ற விசேட குழுவின் தலைவரும், சபை முதல்வருமான தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டு

திகதி : 2021-11-22

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கு பக்கச்சார்பற்ற தேர்தல் பிரசாரம் முக்கிய காரணியாகும் தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவின் தலைவரும், சபை முதல்வருமான அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

ஊடகங்கள் நியாயமான முறையில் அறிக்கையிடாமையால் இன்று பல சிக்கல்கள் தோன்றியுள்ளன. தேர்தல் காலத்தில் தேர்தல் பிரசார விளம்பரங்களுக்காக ஊடக நிறுவனங்கள் அதிக கட்டணத்தை அறவிடுகின்றன. இது சில அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதி என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அண்மையில் (20) நடைபெற்ற இந்தக் குழுக் கூட்டத்தில் பல இலத்திரனியல் ஊடக நிறுவனங்கள் சாட்சியமளித்ததுடன், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி உதவிச் செய்திப் பணிப்பாளர் பிரசாத் கே.தொடங்கொடகே குறிப்பிடுகையில், தேர்தல் காலத்தில் அனைத்து வேட்பாளர்களுக்கும் ஒரே நேரத்தில் ஒளிபரப்பு நேரத்தை தமது ஊடக நிறுவனம் வழங்குவதாகத் தெரிவித்தார். தேர்தல் பிரசாரம் தொடர்பில் ஏதேனும் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டுமாயின் இதற்குப் பொதுவான இணக்கப்பாடு அவசியம் என்றும் அவர் குழுவில் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் பிரசாரம் தொடர்பில் அரச மற்றும் தனியார் ஊடகங்களை உள்ளடக்கும் வகையில் ஒரு சட்டக் கட்டமைப்பொன்றின் அவசியத்தை சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பின் (ITN) பிரதிப் பொது முகாமையாளர் (செய்தி) சுதர்மன் ரந்தலியகொட தெரிவித்தார். அரச ஊடகங்கள் மற்றும் தனியார் ஊடகங்கள் மூலம் வேட்பாளர்களுக்கு இலவச நேரங்களை வழங்குவது மிகவும் முக்கியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே, தேர்தல் காலத்தில் செய்திகளில் சமனிலை பேணப்படுவதில்லை. இதே நிலைதான் அனைத்து ஊடகங்களிலும் காணப்படுகின்றது என்றார்.

தனியார் ஊடக நிறுவனங்களுக்கிடையில் காணப்படும் போட்டித் தன்மை காரணமாக தேர்தல் காலத்தில் வெவ்வேறு யுக்திகளைக் கையாளவேண்டி ஏற்படுவதாக ஹிரு ஊடக வலையமைப்புச் சார்பில் சாட்சியமளித்த செய்திப்பிரிவின் பணிப்பாளர் ஷெஹான் பரனகே தெரிவித்தர். தமது அலைவரிசைகளில் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்வர்ணவாஹினி ஊடகம் மற்றும் தெரண ஊடகம் ஆகிவயற்றின் பிரதிநிதிகளும் இக்குழுவில் சாட்சியமளித்தனர்.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக வழிகாட்டல்களை  நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஆலோசனை பெற வேண்டும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இங்கு தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக வழிகாட்டல்கள் அரச ஊடகங்களுக்கு மட்டுமே பொருந்தும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் குழுவில் தெரிவித்தனர். இந்த வழிகாட்டல்களை அமுல்படுத்துவது தொடர்பில் வெகுஜன ஊடகங்கள் மற்றும் தகவல் அமைச்சிடம் இருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்வது முக்கியம் என குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், சாகர காரியவசம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பாராளுமன்ற  விசேட குழுவின் அடுத்த அமர்வு இம்மாதம் 26ஆம் திகதி நடைபெறும் என அதன் செயலாளரும், பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.

 

1 2

34

5 6

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom