இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு முன்னிலையில் கலப்பு தேர்தல் முறைமையின் அவசியத்தை வலியுறுத்தியது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி

திகதி : 2021-08-12

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணி ஆகியன தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவுக்கு தமது முன்மொழிவுகளை எழுத்து மூலம் நேற்று (11) கையளித்தன.

அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர மற்றும் லசந்த அழகியவண்ண ஆகியோர் தமது கட்சிகள் சார்பில் முன்மொழிவுகளை குழுவின் தலைவர், சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன அவர்களிடம் கையளித்தனர். இராஜங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்கவும் இதன்போது உடனிருந்தார்.

தற்பொழுது கலப்பு தேர்தல் முறைமையொன்று நாட்டுக்கு தேவை என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் குழுவில் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை அத்தியாவசியம் எனவும், ஜனாதிபதியாக இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் நியமிக்கப்படுவதை தடுப்பதற்கு உரிய முறைமை தயாரிக்கப்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் என்பவற்றை ஒரே தினத்தில் நடத்துவதற்கான சாத்தியம், மாகாண சபை தேர்தல் மற்றும் உள்ளூராட்சிமன்ற தேர்தலைகளையும் ஒரே தினத்தில் நடத்துவதன் சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் விசேடமாக கண்டறிய வேண்டும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

மாகாணசபை அதிகாரங்களை பரவலாக்கும் போது மாவட்ட சபை முறையை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தினார்.

அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் போது அதனுடன் தொடர்புடைய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட ஆவணங்களை தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஒப்படைக்கும் முறையொன்று உருவாக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். தேர்தல்களின் போது ஒவ்வொரு கட்சிக்கும் நியாயமான பிரச்சார வாய்ப்புக்கள் இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 பொதுஜன ஐக்கிய முன்னணி சார்பில் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, புதிய மறுசீரமைப்பின் போது தேர்தல் பிரச்சார செலவுகளை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும் என தெரிவித்தார். பணத்தை செலவுசெய்து தேர்தலில் வெற்றிபெறும் போக்கொன்று தற்பொழுது ஏற்பட்டிருப்பதாகவும், அந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு விரிவாக கவனம் செலுத்தவேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

லங்கா சமசமாஜ கட்சி சார்பில் குழுவில் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, அனைத்து இன மக்களினதும் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய தேர்தல் முறைமையொன்று நாட்டில் ஸ்தாபிக்கப்பட்ட வேண்டியது இந்நேரத்தில் தேவையானது என தெரிவித்தார். அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்வதை தடுப்பதன் முக்கியத்துவத்தையும் பேராசிரியர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அரசியல் முறைமை இருக்கவேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் குழுவில் தெரிவித்தனர். தோட்டத் தொழிலாளர்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

உரிய நேரத்தில் தேர்தல்களை நடத்துவது முக்கியமானது என குழுவில் கருத்துத் தெரிவித்த ஜனநாயக இடதுசாரி முன்னணி கட்சியினர் தெரிவித்தனர். நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முற்றாக நீக்கி, பாராளுமன்ற முறைமையை வலுப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.    

இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி, ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் அருநலு மக்கள் முன்னணி ஆகியன குழு முன்னிலையில் தமது முன்மொழிவுகளை சமர்ப்பித்தன.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து அவர்களும் குழு முன்னிலையில் தமது முன்மொழிவுகளை சமர்ப்பித்ததுடன், அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு புதிய மறுசீரமைப்பில் விரிவாக கவனம் செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார். பல உலக நாடுகள் இலத்திரனியல் வாக்கெண்ணும் முறையை பயன்படுத்திவருவதுடன் பரீட்சார்த்த நடவடிக்கையாக இலங்கையிலும் அந்த முறையை முயற்சித்து பார்க்கவேண்டும் என மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பிரதிநிதிகள் குழுவில் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்தக் குழுவின் அடுத்த கூட்டம் ஓகஸ்ட் 18ஆம் திகதி நடைபெறவிருப்பதாக இக்குழுவின் செயலாளரும், பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதி செயலாளர் நாயகமுமான குஷானீ ரோஹனதீர தெரிவித்தார்.

இதில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி. சில்வா, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், எம்.யு.எம். அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான மதுர விதானகே மற்றும் சாகர காரியவசம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்தர்ப்பத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் உறுப்பினர்களும், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom