படைக்கலச் சேவிதரின் அலுவலகம

படைக்கலச் சேவிதரின் அலுவலகம் பாராளுமன்றத்தின் மிக முக்கியமானதொரு அலுவலகமாகும். இதன் ஆரம்பம் பிரித்தானியப் பாராளுமன்ற வரலாற்றில் இருந்து வருகிறது. சுதந்திரம் பெற்றதன் பின்னர், இலங்கை, வெஸ்ட் மினிஸ்டர் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்ட பிரித்தானியப் பாராளுமன்ற முறைமையைச் சுவீகரித்துக் கொண்டது. இதன் பின்னரே, படைக்கலச் சேவிதரின் அலுவலகம், அதன் தனிப்பட்ட தொழிற்பாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்டு, பாராளுமன்றத்தின் இரண்டாவது முக்கியத்துவம் பெற்ற அலுவலகம் என்ற இடத்தையும் பெற்றுக் கொண்டது. முக்கியத்துவத்தில் முதன்மை இடம் வகிப்பது பாராளுமன்றச் செயலாளர் நாயத்தின் அலுவலகமாகும்.

படைக்கலச் சேவிதர், பாராளுமன்றச் செயலாளர் நாயத்தினால் பணியில் அமர்த்தப்படுகிறார். அவருடைய பணிகளைச் செய்யும் வேளையில் அவர், சபா மண்டபத்தின் பிரதான வாயிலை அடுத்து இருக்கும் ஒரு விசேட இடத்தில் இருப்பார். வைபவங்கள் தொடர்பான பணிகள், ஒழுங்கு முறைகளைப் பேணுதல், செங்கோலைப் பாதுகாத்தல், பாதுகாப்பு, வெளியாள்களுக்கான அநுமதி, பாராளுமன்றத்தில் இட ஒதுக்கீடு செய்தல், பார்வையாளர் கூடங்களை மேற்பார்வை செய்தல் என்பன இவரது பணிகளுள் சிலவாகும்.

 

வைபவ ரீதியான தொழிற்பாடுகள்

பாராளுமன்ற வைபவங்களின் தலைவர் படைக்கலச் சேவிதராவார். இவ்வகையான வைபவங்களை ஏற்பாடு செய்வது இவரின் பொறுப்பாகும். ஒரு புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் போது பாராளுமன்றத்தின் வைபவ ரீதியான ஆரம்பம் முக்கியமானதொரு வைபவமாகக் கருதப்படுகிறது. அத்துடன் பிற நாட்டுத் தலைவர்களை வரவேற்பதும் மற்றுமொரு மிக முக்கியமான நிகழ்வாகும். இதுவரை இலங்கைப் பாராளுமன்றத்தில், இவ்வகையான ஏழு தலைவர்கள் உரை நிகழ்த்தியுள்ளனர்.

அரச மரியாதையுடனான இறுதி ஊர்வல நிகழ்வுகளும் படைக்கலச் சேவிதரினால் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஏற்பாடு செய்யப்படும்

தன்னுடைய பணிகளை நிறைவேற்றும் பொருட்டு, படைக்கலச் சேவிதர்,ஏனைய பாராளுமன்றச் செயலாளர் நாயத்தின் ஊழியர்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

 

ஒழுக்கமும் ஒழுங்கு முறைகளைப் பேணலும்.

பாராளுமன்ற உறுப்பினர்கள், ஒழுக்கத்தையும், ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிப்பதையும் பேணும் பொறுப்பு, சபா நாயகரின் வழிகாட்டலின் கீழ், படைக்கலச் சேவிதரையே சாரும். தவிசின் அதிகாரங்களுக்கு மதிப்பளிக்காமல், மரியாதையின்றி, பாராளுமன்ற அலுவல்களைக் குழப்பும் விதத்தில், மீண்டும் மீண்டும் நிலையியற் கட்டளைகளை மீறும் விதமாக நடந்து கொள்ளும் உறுப்பினர்களை சபா மண்டபத்திலிருந்தோ அல்லது பாராளுமன்ற வளாகத்திலிருந்தோ வெளியேற்றும்படியான சபையின் கட்டளைகளையும் இவர் நிறைவேற்ற வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்,எந்தவொரு விடயம் பற்றியும் முறைப்பாடு செய்யும் போது, அவ்விடயம் தொடர்பான விசாரணை செய்யும் பொறுப்பு படைக்கலச் சேவிதரிடம் வழங்கப்படும். அத்துடன் அவர், இது பற்றிய பாரபட்சமற்ற அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படும்.

பாராளுமன்றத்தின் விசேட உரிமைகளின் காவலர், சபா நாயகராவார், இவரின் கட்டளைகளையேற்று அவற்றைச் செயற்படுத்தும் அதிகாரத்தை, படைக்கலச் சேவிதர் சட்டப்படி பெற்றுள்ளார்.

படைக்கலச் சேவிதர், பாராளுமன்றத்தின் உறுப்பினர் வருகை இடாப்பை பேணும் பொறுப்பையும் சபா மண்டபத்தின் ஆசன ஒழுங்குமுறையைத் தீர்மானிக்கும் பொறுப்பையும் கொண்டிருக்கிறார். பாராளுமன்றக் கட்டிடத்தினுள் ஆயுதம் தரிக்க உரிமை பெற்ற ஒரே அதிகாரி இவரேயாவார்.


செங்கோலின் பாதுகாவலர்

பாராளுமன்ற அதிகாரத்தின் சின்னமாக விளங்கும், வைபவ ரீதியான, அலங்கரிக்கப்பட்ட செங்கோல், படைக்கலச் சேவிதரின் பாதுகாப்பிலேயே இருக்கும். சபா மண்டபத்தில் அதற்குரிய இடத்தில் செங்கோல் வைக்கப்படும் போது, அது சபை அமர்வில் இருப்பதைக் குறிக்கும். கூட்ட சபாநாயகர் சபா மண்டபத்தினுள் பிரவேசிக்கும் போதும், சபா மண்டபத்தை விட்டு வெளியேறும் போதும், படைக்கலச் சேவிதர் செங்கோலை ஏந்தியபடி உடன் வருவார். சட்டத்தின் படி, குறித்த நேரத்தில், செங்கோல் சபா மண்டபத்தினுள் கொண்டுவரப்படவும், கூட்ட அமர்வின் இறுதியில் கொண்டு செல்லப்படவும் வேண்டும். ஆதலால், அங்கீகாரமற்ற முறையில் செங்கோல் அகற்றப்படுவதால், கூட்ட அலுவல்கள் செல்லுபடியற்றவையாகாது.

தவிசில் சபா நாயகர் அமரும் போது, செங்கோலானது சபா பீடத்தில், அதன் பளிங்கு முனை அரசாங்க இருக்கைகளைச் சுட்டும் விதத்தில் வைக்கப்படும். கூட்ட இடை நிறுத்தத்தின் போது செங்கோல் சபா பீடத்தில் இருந்து அகற்றப்படுவதில்லை.

 


 


பாதுகாப்பு

பாராளுமன்ற வளாகத்தின் ஒட்டுமொத்தமான பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருப்பவர் படைக்கலச் சேவிதராவார். அத்துடன் பாராளுமன்றமானது, அத்துமீறல்கள், விபத்துக்கள், தீ போன்ற ஆபத்துக்களினால் பாதிக்கப்படாமலிருப்பதை உறுதி செய்யும் பொறுப்பும் இவரையே சாரும். இக்கடமைகளைச் சரிவர நிறைவேற்ற, சுமார் 235 அதிகாரிகளைக் கொண்ட பாராளுமன்ற பொலிஸ் பிரிவு இவருக்கு தமது உதவிகளைச் செய்யும்.

படைக்கலச் சேவிதரானவர், தகுந்த அதிகாரிகளின் உதவியுடன், பாராளுமன்ற ஊழியர்களுக்கு அவ்வப்போது, ஓர் ஒழுங்கான முறையில், வெடி குண்டுகளைக் கண்டறிதல் மற்றும் தீயணைப்புப் பற்றிய பயிற்சிகளை ஏற்பாடு செய்வார்.

 

வெளியாள்களுக்கான அநுமதி

பாராளுமன்ற வளாகத்தினுள் வெளியாள்கள் வருவதைக் கட்டுப்படுத்துபவர் படைக்கலச் சேவிதராவார். வருகை தருபவர்கள், பாராளுமன்றத்தினுள் அநுமதிக்கப்படுமுன் பாதுகாப்புப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். அத்துடன் பார்வையாளர் கூடங்களில் இருக்கும் போது சில விதிகளுக்குக் கட்டுப்படவும் அவர்கள் சம்மதிக்க வேண்டும். விசேட பார்வையாளர்கள், சபா நாயகரின் பார்வையாளர் கூடத்தில் அமர்த்தப்படுவதுடன் அவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட பாதுகாப்புப் பரிசோதனைக்கே உட்படுத்தப்படுவர். பொதுப் பணி அதிகாரிகள், அவர்களுக்கென, சபா மண்டபத்தின் அருகே காணப்படும் விசேட பொதுப் பணி அதிகாரிகளுக்கான பார்வையாளர் கூடங்களில் அமர்ந்து கூட்ட அலுவல்களைக் கவனிப்பர். தேவையான நேரங்களில், சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வர்.

சபா நாயகரின் ஆசனத்துக்குப் பின்னால், ஊடகவியலாளர்களுக்கான விசேட பார்வையாளர் கூடம் காணப்படுகிறது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளரின் சிபாரிசுடன் வந்தால் இவர்களுக்கு அநுமதிச் சீட்டு வழங்கப்படும்.

இவ்வகைப் பார்வையாளர்களை விட பெருந்தொகையான மக்கள், விசேடமாக பாடசாலை மாணவர்கள், பாராளுமன்றம் அமர்வில் இருக்கும் போதும் அமர்வில் இல்லாத நாள்களிலும் பாராளுமன்றத்திற்கு வருகை தருவர்.



பார்வையாளர் கூடங்களை மேற்பார்வை செய்தல்

பார்வையாளர் கூடங்களுக்குள் பிரவேசிப்பவர்கள் அனைவரும் அநுமதிச் சீட்டு வழங்கப்பட்டிருப்பதையும், பொருத்தமான உடை அணிந்திருப்பதையும், அவர்கள் மரியாதையுடன் நடந்துகொள்வதையும் உறுதிப்படுத்துவதும் படைக்கலச் சேவிதரின் கடமையாகும். பார்வையாளர்கள், அலுவல்களைக் குழப்பாதிருப்பதையும், உறுப்பினர்களுக்கு தடங்கல் விளைவிக்காமலிருப்தையும் இவர் உறுதி செய்ய வேண்டும். அத்துடன் பார்வையாளர்கள், பாராளுமன்ற வளாகத்தினுள் அநுமதியற்ற இடங்களில் அலையாமல் இருப்பதையும் இவர் உறுதி செய்ய வேண்டும்.

 

இட ஒதுக்கீடு

அலுவலக அறைகள், குழு அறைகள், நேர்முகப் பரீட்சைகளுக்கான அறைகள், வசதிகள், அவற்றின் நிருவாகம் என்பனவற்றிற்கு படைக்கலச் சேவிதரே பொறுப்பானவராவார். எந்தவோர் உறுப்பினருக்காவது குழு அறையோ அல்லது நேர்முகப் பரீட்சைகளுக்கான அறையோ தேவைப்படின் அவ்வாறான வசதிகளை படைக்கலச் சேவிதரிடம் இருந்து பெற்றுக்கொள்ளமுடியும்.

 

சர்வதேசத் தொடர்புகள்

பொது நலவாயப் பாராளுமன்றப் படைக்கலச் சேவிதர் சங்கத்தில், படைக்கலச் சேவிதர் அங்கம் வகிக்கிறார். பாராளுமன்ற நிருவாகம் தொடர்பான நவீன அபிவிருத்திகளை அறிந்து கொள்வதற்காக இவர், இச்சங்கத்தின் கூட்ட அமர்வுகளுக்கு ஒழுங்காக சமுகமளிப்பார்.

 

படைக்கலச் சேவிதர்கள்

 

எம். இஸ்மயில்,எம்.பி(B).ஈ 1947 - 1961

 

.ஏ.ஜெ.ஆர். த சில்வா 1961 - 1970

 

ரொனி அபேசிங்க 1970 - 1996

 

விஜய பள்ளியகுருகே 1996 - 2006

 

அனில் பி(P). சமரசேகர 2006 - இன்று வரை

மேலே செல்ல

ප්‍රචාරණය කරන්න

අවසන් යාවත්කාලීන කිරීම 2018-09-04