இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

தேசிய நீரளவை சட்டமூலம் தொடர்பில் தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கருத்திற்கொள்ளப்பட்டது

திகதி : 2024-01-02

இலங்கை கடல் எல்லைக்கு அருகாமையில் பயணிக்கும் கப்பல்கள் ஊடாக வருடாந்தம் டொலர் வருமானம் ஈட்டும் வகையில் இலத்திரனியல் கப்பற்போக்குவாரத்துச்சார் விளக்கப்படங்களைத் (Electronic Navigation Charts) தயாரிப்பதற்கான சட்டரீதியான அதிகாரத்தை வழங்கும் தேசிய நீரளவை சட்டமூலத்தில் உள்ள விடயங்கள் தொடர்பில் தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் குழு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) சரத் வீரசேகர தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.

1983 ஆம் ஆண்டு முதல் இலங்கை கடல் எல்லையில் பயணிக்கும் கப்பல்களிலிருந்து டொலர் பெற்றுக்கொள்ளும் உரிமை இருந்தபோதும், அது பயன்படுத்தப்படவில்லை என இதன்போது கலந்துகொண்ட  நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். அதற்கமைய, இதற்குத் தேவையான சட்டரீதியான அதிகாரம் இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படுவதன் ஊடாக இலங்கைக்குக் கிடைப்பதாக நீதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், இந்தச் சட்டத்தின் ஊடாக தேசிய நீரளவைசார் அலுவலகத்தை ஸ்தாபிப்பதன் மூலம் நீரளவைசார் அளவையாளர்கள் மற்றும் கப்பல் துறைசார்ந்த நிலப் படவியலர்களை பதிவு செய்தல் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட விடயங்களுக்கு ஏற்பாடு செய்வதும் இந்த சட்டத்தின் நோக்கமாகும் என குழு முன்னிலையில் கருத்துத் தெரிவித்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

தென் கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்துக்கு இங்கிலாந்தின் அரச கடற்படையினால் 3 வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக இதன்போது கடற்படையினர் தெரிவித்தனர். அதற்கமைய, அந்த வரைபடங்களைத் தயாரிப்பதற்கு இலங்கையினால் தரவுகள் மாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். எனினும், இந்த சட்டம் ஊடாக ஆய்வு செய்து தரவுகளைப் பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட கடல் பகுதிக்கு வரைபடம் தயாரிக்கும் அதிகாரம் இலங்கைக்குக் கிடைப்பதாக கடற்படை அதிகாரிகள் குழுவில் அறிவுறுத்தினர். இவ்வாறு இற்றைப்படுத்தப்படும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு சம்பந்தப்பட்ட வரைபடங்களையும் இற்றைப்படுத்தி டொலர் ஈட்ட முடியும் என அந்த அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த தேசிய நீரியல்வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமை (NARA) நிறுவனத்தின் அதிகாரிகள் குறிப்பிடுகையில், இந்த சட்டமூலம் ஊடாக தமது நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் ஒருசில பணிகள் இழக்கப்படுவதாகத் தெரிவித்தனர். எனினும் இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகச் சுட்டிக்காட்டிய குழுவின் தலைவர், விவாதத்தில் குழுநிலையின் போது அதற்கான திருத்தங்களை முன்வைப்பதற்கு NARA நிறுவனத்துக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர் ஊடாக சந்தர்ப்பம் வழக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.

இந்தக் கூட்டத்தில் குழுவின் தலைவரின் அனுமதியுடன் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் கௌரவ பியல் நிஷாந்த, குழுவின் உறுப்பினர்களான கௌரவ ரவூப் ஹகீம், கௌரவ (பேராசிரியர்) சன்ன ஜயசுமன, கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிடியவும், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ புத்திக பதிரன, பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் பிரியந்த பெரேரா ஆகியோரும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

 

1 9

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom