உள்ளூராட்சி மன்றங்கள் குறித்த விடயங்களைக் கலந்துரையாடுவதற்கு உள்ளூராட்சி ஆணையாளர்கள் மற்றும் ஆளுநர்கள் எதிர்காலத்தில் அழைக்கப்படுவர் – அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் |
திகதி : | 2021-12-03 |
உள்ளூராட்சி மன்றங்களில் வரவுசெலவுத்திட்டம் நிறைவேற்றப்படாமல் அடுத்த வருடத்துக்கான செலவுகளை மேற்கொள்ள முடியாது என்றும், அம்பலாங்கொடை நகர சபை 2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தை நிறைவேற்றாமல் பணத்தை செலவிட்டிருப்பதாக நேற்று (02) பாராளுமன்றத்தில் நடைபெற்ற அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது. இது சட்டத்துக்கு முரணானது என உள்ளூராட்சி ஆணையாளரினால் ஆளுநருக்குத் தெரியப்படுத்தப்பட்ட பின்னர் உள்ளூராட்சி மன்றத்தைக் கலைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் இங்கு தெரியவந்தது. இதுபோன்ற நிலைமை மேலும் சில உள்ளூராட்சி மன்றங்களிலும் காணப்படுவதாக வருகை தந்திருந்த உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
இது தவறான எடுத்துக்காட்டு என்றும் இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்த அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன், உள்ளூராட்சி மன்ற விடயங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு உள்ளூராட்சி ஆணையாளர்கள் மற்றும் ஆளுநர்கள் உள்ளிட்ட பொறுப்புக் கூறவேண்டிய அதிகாரிகளை இக்குழு முன்னிலையில் அழைப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார்.
அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்ஹ ஆகியோரின் தலைமையில் நேற்று (02) பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இந்த விடயங்கள் தெரியவந்தன.
உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களின் திட்டங்களைப் பூர்த்தி செய்வதற்கான காலத்தை நீடிக்க வேண்டிய அவசியம் குறித்து உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். சீமெந்துத் தட்டுப்பாடு, தற்பொழுது காணப்படும் கொவிட் சூழல் போன்ற காரணங்களால் உரிய திட்டங்களை வரையறுக்கப்பட்ட காலத்துக்குள் பூர்த்தி செய்ய முடியாது போனமையால், அடுத்த வருடம் ஜனவரி மாதம் வரை அல்லது இதனைவிட அதிக காலத்தை வழங்குமாறு இங்கு கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் விரைவில் கலந்துரையாடி தீர்மானம் எடுக்குமாறும் அமைச்சர் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் உள்ள மைதானங்கள் போன்ற சொத்துக்கள் முறையற்ற விதத்தில் பராமரிக்கப்படும் விடயம் குறித்தும் குழு உறுப்பினர்கள் கவனத்தை ஈர்த்தனர். உள்ளூராட்சி நிறுவனங்கள் இவ்வாறான செயற்பாடுகளை உரிய முறையில் மேற்கொள்கின்றனவா என்பதை அறிந்து கொள்வதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் தலையீட்டுடன் மாதம் ஒரு தடவையாவது முன்னேற்ற மீளாய்வை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.
மாகாண சபைகள் செயலிழந்துள்ள நிலையில் உள்ளூராட்சி மன்றங்களின் நிதியை நிர்வகிப்பதற்கு உள்ளூராட்சி ஆணையாளர்கள் நடவடிக்கை எடுக்காததால் இதனை ஒழுங்குபடுத்த விசேட வேலைத்திட்டமொன்றை சம்பந்தப்பட்ட அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியமும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
தற்போது நிலவும் கொவிட் சூழ்நிலை காரணமாக உள்ளூராட்சி நிறுவனங்களின் வருமானம் வேகமாக குறைந்துள்ளதாக குழுவில் விவாதிக்கப்பட்டது. வரிப் பண வசூலிப்பின்போது வரி வசூலிக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் பெறப்பட்ட வருவாய் உண்மையான வருவாயைவிட மிகக் குறைவு என்றும் குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். மாநகர சபைகளில் நிலவும் பொது சுகாதார பரிசோதகர்கள், மருந்தாளர்கள், குடும்ப சுகாதார பணியாளர்களின் பற்றாக்குறை போன்ற பல விடயங்கள் குறித்தும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளை உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு நேரடியாக அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இந்தப் பிரச்சினைகள் இனங்காணப்பட்டுள்ளதால், அவற்றை துரிதமாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஷான் விஜேலால்.டி.சில்வா, சுதத் மஞ்சுள மற்றும் பல பாராளுமன்ற உறுப்பினர்களும், அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்








